ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேசியது, சட்டசபை மரபுகளுக்கு எதிரானது எனக்கூறி, திமுக பொருளாளர் துரைமுருகன், கவர்னர் புரோஹித்திடம்அமைச்சர் கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கருப்பணன், திமுக வென்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும் . ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டு போட்டதால்தான் தி.மு.க சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இப்ப சத்தியமங்கலத்துல தி.மு.க சேர்மன் வந்துட்டாங்க. அவங்களால என்ன செய்ய முடியும். அவங்க ஜெயிச்சாலும் நாமதான் ஆளுங்கட்சி, நாம பண உதவி கொடுத்தாத்தான் அவங்க வேலை செய்ய முடியும். நாம பணம் கொடுக்கலைன்னா அவங்க எப்படி வேலை செய்வாங்க. சத்தி ஒன்றியத்துல என்ன அடிப்படை வசதிகள் வரும். எதுவுமே வராதே. தி.மு.க-வில் வெற்றி பெற்ற சேர்மன்களிடம் பணம் கம்மியாகத்தான் கொடுப்போம்” எனக் கூறினார்.
இதுதொடர்பாக, கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், துரைமுருகன் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அமைச்சரவையில் இருந்து கருப்பணன் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும், அதற்குரிய நடவடிக்கையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் எடுக்க வேண்டும் ஆட்சியின் மரபை மீறி நடந்துகொண்ட ஒருவர் அமைச்சரவையில் இனி இருக்கக்கூடாது . திமுகவுக்கு வாக்களித்தவர்களை பழிவாங்கும் நோக்கில் அமைச்சரின் பேச்சு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பேசியதற்கான ஆதாரங்களையும், துரைமுருகன் அத்துடன் இணைத்துள்ளார்.
இது புதிதல்ல : சர்ச்சை கருத்துகளால் பரபரப்பு ஏற்படுத்துவது அமைச்சர் கருப்பணனுக்கு ஒன்றும் புதிதல்ல. தொழிற்சாலை கழிவுகளால் ஆற்றில் மிதந்த நுரையை, சோப்பு நுரை என்று கூறியவர் தான் இந்த அமைச்சர் கருப்பணன். சிலகாலம் ஒதுங்கி இருந்த அவர், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதாக பலர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.