சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சான்றிதழ்களை வழங்க பள்ளிகள் இ-சேவை மையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (23.05.2025) நடைபெற்றது.
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 107 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட அரசாணை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரக் காலத்திற்குள் சான்றிதழ்கள் வழங்க வருவாய்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எந்தவித சிரமுமின்றி ஒரு வாரத்திற்குள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ-சேவை மையங்களில் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் சம்பந்தப்பட்ட தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்தால் வேண்டிய உதவிகள் செய்யப்படும். இ-சேவை மையத்தில் மாணவ மாணவியர் சான்றிதழ் பெற முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.