திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் கிளாம்பாக்கத்திற்கு இணையாக பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பேருந்து நிலையத்தை மே 9-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்நிலையில், பேருந்து நிலையத்தின் திறப்பு விழா எந்த விதமான பிரச்சனையும் இன்றி நடைபெற வேண்டும் என்று ரெட்டமலை கருப்புசாமி கோயிலில், அமைச்சர் கே.என். நேரு 20 கிடாக்களை வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், 250 கிலோ கோழிக்கறி விருந்தும் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் கட்சியில் சில நிர்வாகிகளை முத்துசெல்வம் அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், சில நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
எனினும், பேருந்து நிலைய திறப்பு விழா பிரச்சனை இன்றி நடைபெற வேண்டும் என்று கோயிலில் அமைச்சர் ஒருவர் கிடாய் வெட்டி விருந்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி - க. சண்முகவடிவேல்