கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி சிதம்பரநாதனின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு களியக்காவிளை பேருராட்சி அலுவலகம் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செய்தியாளர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் களம் எப்படி உள்ளது எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மனோ தங்கராஜ், “திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை. வெற்றி நிச்சயம்.
தமிழகத்தில் வலுவாக இருந்த ஒரு அரசியல் இயக்கம் இன்று மேய்ப்பன் இல்லாத ஆட்டுமந்தை போல் திகழ்கிறது. மந்தையை விட்டு ஆடுகள் ஒவ்வொன்றாக வெளியேறி கொண்டு இருக்கின்றன.
ஹிட்லர், முசோலினி போன்றவர்களும் ஆட்சியை பிடித்துள்ளார்கள். அதே போன்றுதான் தேசிய அளவில் பாரதிய ஜனதாவின் வெற்றியை பார்க்க முடியும்.” என்றார்.
தொடர்ந்து, “ஒருவர் திருச்செந்தூரில் இருந்து யாத்திரை போவதை பற்றி கேட்கிறீர்கள். இந்த யாத்திரை எண்ணம் தானே உதித்தல்ல.
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல். கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாக பாவித்து தன் பொல்லா சிறைகை விரித்து ஆடினது போல்தான் இதுதான்” என்றார்.
தொடர்ந்து, அண்ணாமலை யாத்திரை என்ற பெயரில் நன்றாக ஊர் சுற்றட்டும். இவரது யாத்திரை தேவையில்லாத ஒன்று என்பது மக்களுக்கே தெரியும். மதத்தை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/