காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகர்கோவில் கதர் விற்பனை அங்காடியில் விற்பனையை அமைச்சர் மனோ தங்கராஜ் திங்கள்கிழமை (அக்.2) தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலத்திற்கு 10 டயர் கனரக வாகனங்கள் மட்டுமே கனிமப் பொருள்களை எடுத்து செல்ல அனுமதித்த நிலையில் அந்த கட்டுப்பாடு பின்பற்ற பட்ட நாள்களில் சாலையில் வாகனப் போக்குவரத்து நெருக்கடி தடுக்கப்பட்டதுடன், சாலை விபத்தும் இல்லாதிருந்தது.
இந்த நிலையில், லாரி மற்றும் குவாரி அதிபர்களின் பேராசையின் காரணத்தால் நீதிமன்றத்தில் முறையிட்டதின் அடிப்படையில் நீதிமன்றம் 10க்கும் அதிகமான சக்கர வாகனங்களுக்கு முழுமையாக அனுமதி கொடுக்காமல், ஒரு வழி முறை படுத்தியதை லாரி மற்றும் குவாரி உரிமையாளர் அவர்களுக்கான அனுமதியாக கருதுகின்றனர்.
அரசு நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது. குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலைகள் கிடையாது. குமரியில் உள்ள ஒரு வழி சாலையும் குறுகலாக இருப்பதால் கடந்த ஆண்டு மட்டும் சாலை விபத்தில் 300க்கும் அதிகமானவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த அவலத்தை தடுக்க பலமுறை லாரி மற்றும் குவாரி அதிபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பட மறுக்கிறார்கள். மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்களை தடுக்கும் அதிகாரம் மாநில அரசின் கையில் இல்லை.
எல்லா உரிமைகளும் மத்திய அரசின் கையில் உள்ளது. ஒன்றிய அரசிடம் இது குறித்து கோரிக்கை வைக்க உள்ளோம். குமரி மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் தூரத்தில் குவாரி அமைக்க இருந்த தடையை மத்திய பாஜக அரசின் ஆதரவோடு கடந்த அதிமுக அதனை 0 கிலோமீட்டர் என அறிவித்தது தான் இந்த நிலைக்கு காரணம்.
தமிழக அரசு 10 சக்கர வாகனங்கள் மட்டுமே இயக்க வைத்து, கூடுதல் எண்ணிக்கையில் ஆன டயர் கனரக வாகனத்தை தடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம்” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“