தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு நலத்திட்டங்கள் வழங்க வருகை தரவுள்ளதை முன்னிட்டு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு 21.02.2025 மற்றும் 22.02.2025 ஆகிய இரு தினங்கள் வருகை புரிந்து பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் வருகையினை முன்னிட்டு மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முன்னேற்பாடு பணிகள் குறித்து கடலூர், தனியார் உணவக கூட்டரங்கில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது:
பொதுமக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும் வகையிலும், மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் வாயிலாக வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், மக்களின் வசிப்பிடம் அருகாமையிலே அனைத்து துறை அலுவலர்களுடன் முகாம்களை நடத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று தீர்வுகாணும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் 3 கட்டங்களாக நடத்தப்பட்டு பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவது குறித்து மாவட்டந்தோறும் களஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
அவ்வகையில் கடலூர் மாவட்டத்தில் 21.02.2025 அன்று கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சுமார் 35,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். தொடர்ந்து 22.02.2025 அன்று வேப்பூர் வட்டம், திருப்பெயர் பகுதியில் நடைபெறவுள்ள பெற்றோரைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்க உள்ளார் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் இரா. சரண்யா, உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.