தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திமுகவின் கூட்டணி கட்சியான விசிக நிர்வாகிகளை நிற்க வைத்து பேசியதாக ஒரு புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உண்மையில் அங்கே என்ன நடந்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மாநிலம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி கட்சிகளுடன் இடங்கள் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டணி கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இடங்கள் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் பக்குவமாக பேசி உடன்படிக்கையை எட்ட வேண்டும் என்று முக்கிய அறிவுரையை வழங்கினார்.
இந்த நிலையில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சியான விசிக இடங்கள் ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தையின்போது, கடலூர் மாவட்ட விசிக நிர்வாகிகளை நிற்கவைத்து பேசியாகவும் அவர்களுக்கு இருக்கைகூட வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இருக்கையில் அமர்ந்திருக்க விசிக நிர்வாகிகள் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. இந்த புகைப்படத்தைக் குறிப்பிட்டு, விசிக ஆதரவாளர்களும் விசிகவினரும் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சீட் பங்கிடு பேச்சுவார்த்தையின்போது விசிக மாவட்ட நிர்வாகிகளை நிற்க வைத்துப் பேசி அவமதித்திருக்கிறார். மேலும், இதுதான் திமுகவின் சமூக நீதியா என்று கேள்வி எழுப்பி பலரும் திமுகவையும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"