தமிழக அரசின் தொழிலாளர்கள்துறை அமைச்சர் நிலோபர் கபில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்தித்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தெரியவந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் ஆவார்கள். அதனால், தமிழக அரசு டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தெரிவித்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியது.
இதையடுத்து, டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த 8 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் 52 பேர் தனியார் கல்லூரிகள், தனியார் திருமண மண்டபங்களில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 8 பேர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர்கள் குடும்பத்தினர் 12 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மற்ற 40 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படாமல் அவர்களை 6 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்து ஏப்ரல் 9-ம் தேதி அவர்கள் அனைவரையும் தொழிலாளர்கள் துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் குடும்பத்தினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்காமல் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 11-ம் தேதி அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஏப்ரல் 13-ம் தேதி வாணியம்பாடியைச் சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர்களை சந்தித்த அமைச்சர் நிலோபர் கபில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, அமைச்சர் நிலோபர் கபில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணை வீட்டுக்கு வழியனுப்பி வைத்த 2 நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 11-ம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.