ஆவடி சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜனும் திமுக சார்பில் நாசர் போட்டியிட்டனர்.இந்தத் தேர்தலில் பாண்டியராஜன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 64 வாக்குகள் பெற்றார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நாசர் ஒரு லட்சத்து ஆறாயிரத்து 669 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்
நாசரை விட ஆயிரத்து 395 வாக்குகள் வித்தியாசத்தில் பாண்டியராஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்க பட்டார்.மாஃபா. பாண்டியராஜன் இந்த வெற்றியை எதிர்த்து தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் நாசர் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில் பாண்டியராஜன் வெற்றி என்பது முறைகேடுகள் மூலமாக பெற்ற வெற்றியாகும். மேலும் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார் எனவே அவருடைய வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்திருந்த மாஃபா பாண்டியராஜன் தமக்கெதிரான குற்றச்சாட்டு என்பது எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாத குற்றச்சாட்டுகள் ஆகும் எனவே எனக்கு எதிரான தேர்தல் வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் தன்னுடைய தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி முரளிதரன் முன் நிலுவையில் உள்ளது. தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற மாஃபா பாண்டியராஜன் மனு மீது விசாரணை முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.வி முரளிதரன் ஆவடி தொகுதி தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற பாண்டியராஜன் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தேர்தல் வழக்கை அவர் சந்திக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணை வரும் 16 ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.