சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் காவல் துறை விசாரணையின் போது மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், ரூ. 7.50 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் இன்று நேரில் சென்று வழங்கினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 1 ஆம் தேதி அஜித்குமாரின் குடும்பத்தினருடன் அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, கருணை அடிப்படையில் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு, சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் லிட் (காரைக்குடி) நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிட நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, அஜித்குமாரின் குடும்பத்தினரின் கோரிக்கைப்படி, நவீன்குமாருக்கு மதுரையிலுள்ள ஆவின் நிறுவனத்தில் பணியிட மாற்றத்திற்கும், ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவிற்கு மாற்று இடம் கோரிய மனுவிற்கும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இன்றைய தினம், நிவாரண நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார். இந்த நிகழ்வில், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.