திமுக எம்பி ஆ. ராசா வரலாற்றை சொன்னாரே தவிற தவறாக எதையும் சொல்லவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
வீரமணிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட திமுக எம்பி ராசா இந்து மதம் தொடர்பாக சர்ச்சை கருத்தை பேசினார். இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இதை ஒரு முக்கியமான பிரச்சனையாக தமிழக பாஜக எடுத்துகொண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆ.ராசாவின் கருத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
”தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவம் வளர்ந்திருக்கிறது. தமிழகத்தில் ஆண்களும் பெண்களும் சமம் என்று பெரியார் சொன்னார். எம்பி ராசாவும் அதைத்தான் சொன்னார். தமிழகத்தில் ஒரு காலத்தில் அப்படி இருந்தது ஆனால் திராவிட மாடல் ஆட்சி அதை மாற்றிவிட்டது என்று கூறினார். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் சொல்லவில்லை. மதத்தின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கக்கூடாது என்பதற்காக அப்படி கூறினார். பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதால்தான் இன்றைக்கு தமிழகத்தில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டது. “ என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.