போதைப் பொருள் கடத்துபவர்கள், ரவுடிகளைத் தேடித் தேடி கட்சியில் சேர்த்தது பா.ஜ.க-தான் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செவ்வாய்க்கிழமை நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 10.8.2022 அன்று மாநில அளவில், போதைப் பொருள்களைத் தடுப்பதற்காக காவல்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் ஆகியோர்களின் குழுவை கூட்டி தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் இருக்கக் கூடாது என்பதற்காக அந்த குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கஞ்சா பயிரிடப்படாத பூமி தமிழகம். எந்தப் பகுதியிலும் கஞ்சா பயிர் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிப்பது கிடையாது. பக்கத்து மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தாலும் டிஜிபி இடம் சொல்லி 6500 ஏக்கர் கஞ்சா பயிர் அழிக்கப்பட்டது. எதிர்கால தலைமுறையினரை காக்க வேண்டும் என்பதற்காக போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.” என்று தமிழக அரசின் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்க அளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, “கடந்த அ.தி.மு.க ஆட்சியில், கஞ்சா வியாபாரத்துக்கு உடந்தையாக இருந்தார் என்று ஒரு அமைச்சர் குற்றம்சாட்டப்பட்டு அந்த அமைச்சர் மீது வழக்கு தொடுப்பதற்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். அதே போல, இன்றைக்கு ஒன்றிய ஆட்சியில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், முக்கியமாக 16 பேர், அவர்கள் கஞ்சா கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள். அவர்களை எல்லாம் சிவப்புக் கம்பளம் வீசி கட்சியில் (பா.ஜ.க) இணைத்துள்ளது. போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பா.ஜ.க.தான். அகில இந்திய அளவிலும் அந்த கட்சியிலேதான் அந்த தொழிலிலே ஈடுபடுபவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.” என்று கூறினார்.
மேலும், “இன்றைக்கு பாரதப் பிரதமராக இருக்கக் கூடிய மோடியின் மாநிலம்தான் குஜராத். அந்த மாநிலத்தில்தான், போதைப் பொருள் நடமாட்டம் என்பது அதிகமாக இருக்கிறது என்பது நாடறிந்த ஒன்று.” என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மேலும் கூறியதாவது: “2022-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2,016 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் வழக்குகளில் 80 சதவீதத்துக்கு அதிகமானவர்களுக்கு தண்டனையை தி.மு.க அரசு பெற்றுத்தந்துள்ளது. ஆளுநர் அனுமதி அளித்த பிறகே குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, யாரும் குழப்பத்தை விளைவிக்க முடியாது. போதைப்பொருள் வழக்குகளில் 80%-க்கும் மேல் தண்டனை பெற்றுத் தந்துள்ளது தமிழ்நாடு அரசு. லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாடு அரசு மீது பிரதமர் மோடி பழிபோடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. இந்தியா முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிக அளவில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. போதைப்பொருள் கடத்தும் பா.ஜ.க.வினரை முதலில் அண்ணாமலை தடுக்கட்டும். தேர்தலுக்காக மதுரை எய்மஸ் மருத்துவமனை பணி துவங்கியுள்ளது. தேர்தலுக்கு பின் பணி நின்றுவிடும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“