/tamil-ie/media/media_files/uploads/2021/06/sakkarapani.jpg)
தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவித்த கொரோனா நிவாரண நிதி 2வது தவணையாக ரூ.2,000 நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதற்கு ஜூன் 11 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2000 வழங்க உத்தரவிட்டு அதன்படி முதல் தவனை மே மாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து 2வது தவணை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன.
இந்த நிலையில், கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் முத்துராமலிங்கம் வீதி, பாரதி நகர், பெருமாள் கோயில் வீதி, பூ மார்க்கெட் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கூட்டுறவு பண்டகசாலை ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று (ஜூன் 10) திடீர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் சக்கரபாணி, பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்துக் விசாரித்தார். அதோடு, ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் முதியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரத்யேக வரிசை ஏற்படுத்தித் தர வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்க 11ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும்.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஜூன் 15ம் தேதி முதல் 2வது தவணை ரூ.2,000 மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.