திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் தி.மு.க-வின் ஆட்சிக்கு அபாயத்தை விளைவிக்கும் நோக்கில் பா.ஜ.க செயல்படுகிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகளை அவர் முன்வைத்தார். அதன்படி, "போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.க-வினர் என்று தான் நாங்கள் கருதுகிறோம். தி.மு.க-வின் ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்க வேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான போராட்டம் தேவையற்றது.
இந்த திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். திருப்பரங்குன்றம் மலையை பொறுத்த வரை, 1920-ஆம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன் பின்னர், 1930-ஆம் ஆண்டு லண்டன் கவுன்சில் ஒரு உத்தரவை வழங்கியது.
இதைத் தொடர்ந்து, 1958, 1975, 2004, 2017, 2021 என பல கட்டங்களில் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்றன. தற்போது கூட இந்த விவகாரம் தொடர்பான இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. கடந்த காலங்களில் எந்த அடிப்படையில் நீதிமன்றங்கள் உத்தரவுகளை வழங்கியதோ, அதன்படியே இந்த அரசு செயல்பட்டுள்ளது.
ஆனால், இதைக் கொண்டு அரசியல் குளிர் காயலாம் என நினைக்கின்றனர். நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் தான் தமிழக அரசு செயல்படும் என அவர்களுக்கு நான் கூறிக் கொள்கிறேன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில், முதலமைச்சர் அனுமதியுடன் விரைவில் அந்த மலைக்கு செல்ல இருக்கிறேன்.
அப்பகுதியில், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். தேர்தல் லாபத்திற்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை பா.ஜ.க கையாள்கிறது. பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கையால் அவர்களது வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியம் இல்லை. போராட்டம் எனக் கூடியவர்கள் அனைவரும், ஒரு மதத்திற்கு எதிராக தான் கோஷம் எழுப்பினர்.
பா.ஜ.க-வில் இருப்பவர்கள், மதத்தால் மக்களை வேறுபடுத்துகின்றனர். ஏற்கனவே என்ன வழிபாட்டு முறை இருக்கிறதோ, அதே முறை தொடரும் என அரசு கூறி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.