சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள கிளாம்பாக்கத்தில், ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.
இதை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது,”சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக, கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ. 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஜுன் மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட தயாராக உள்ளது.
இந்த பேருந்து முனையத்தில், புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள் நிறுத்துவதற்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனையம் உள்ளது. இப்பேருந்து முனையத்தில் மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதிகள் 60 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தனி அலுவலக கட்டிடம், பாதுகாகப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள், கழிவறைகள், மாகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இம்முனையத்தில் அடித்தளத்தில் 2,769 இருசக்கர வாகனங்கள், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள், அவசர சிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலூட்டும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை, பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நவீன வசதிகளான 6 பயணிகள் மின் தூக்கிகள், 2 சர்வீஸ் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்றவை கட்டப்பட்டுவருகிறது.
முதல் தளத்தில் 46 கடைகள், 1 உணவகம், 4 பணியாளர் ஓய்வறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனி ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள் அமைப்பட்டுள்ளது.
மழைநீர் கால்வாய், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணைமின் நிலையம், டீசல் ஜெனரேட்டர் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரவு நேர பயன்பாட்டிற்க்காக அனைத்து சாலைகளிலும் தெருவிளக்குகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் பொறுத்தப்பட்டுள்ளது. புல் தரையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து முனையம் 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளது.” இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil