கோவையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 7-வது மலர் கண்காட்சியை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் எம்.ஆர் கே.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாற்றினார். அப்போது, "வேளாண்மைத் துறையில் கோவை முதலிடத்தில் உள்ளது. இதேபோல், தொழில் துறை, கல்வி, மருத்துவத் துறை போன்றவற்றிலும் கோவை மாவட்டம் முன்னணியில் இருக்கிறது. அதனடிப்படையில், கோவைக்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கி வருகிறார்.
இந்தியாவிலேயே வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தமிழ்நாட்டில் தான். 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்து விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் சுமார் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சியமைத்த முதல் ஆண்டிலேயே மூன்று வேளாண் கல்லூரிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோவை மாவட்டத்தின் தேவைகளை முதலமைச்சரிடம் எடுத்துச் செல்லும் போது, நன்கு உணர்ந்து நிதிகளை வழங்கி வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின்.
இதுவரை இல்லாத அளவுக்கு கோவை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 860 கிலோ மீட்டர் அளவுக்கு ரூ. 415 கோடி மதிப்பிலான தார் சாலைகள், இந்த மூன்று ஆண்டுகளில் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், கூடுதலாக நிதிகள் தேவை என்றவுடன் ரூ. 200 கோடியை, சிறப்பு நிதியாக முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கினார். இன்னும் தேவை இருந்தால் வழங்குவதற்கு தயார் என்றும் கூறியிருக்கிறார்.
ஏறத்தாழ ஐந்து நாட்கள் நடைபெறுகிற இந்த மலர் கண்காட்சி, ஒரு லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஐந்து நாட்களும் கோவை மாவட்ட மக்கள் மற்றும் அருகாமையில் இருக்கக் கூடிய மாவட்ட மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
செய்தி - பி.ரஹ்மான்