minister sengottaiyan : 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து எழுதினால் போதும் என்று வெளியான தகவல் தவறானது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 1,200 மதிப்பெண்களுக்கு நடைபெற்று வந்த தேர்வு, பாடச்சுமையை காரணம் காட்டி, 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டது.
கடந்த ஆண்டும், நடப்பாண்டும் 600 மதிப்பெண்களுக்கே தேர்வு நடைபெற்றது. நடந்து முடிந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் சென்ற வாரம் வெளியாகின. 12 ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். இந்த நேரத்தில் நேற்று மதியம் முதல் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் சுமையை குறைக்க பள்ளிக்கல்வித்துறை, 600 மதிப்பெண்களை 500 மதிப்பெண்ணாக குறைக்க எண்ணியுள்ளதாகவும், அதற்காக ஒரு பாடத்தையே நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
11,12 ஆம் வகுப்பில் பல்வேறு பிரிவுகள் உள்ளதால் மாணவர்கள் நலனை கருதி, 500 மதிப்பெண்களுக்கு ஐந்து பாடத்தில் மட்டும் தேர்வு எழுதும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மொழிப்பாடங்களில் முதல் தாள், 2-ம் தாள் என்பதை ஒரே தாளாக மாற்றவும் முயற்சிப்பதாக தகவல் வெளியானது. இதனால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து தமிழை நீக்க சதி நடப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இது போன்ற தகவல்கள் உண்மையில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “ 11,12 ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்கள் உள்ளன என்றார். மாணவர்களின் விருப்ப அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்து உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது.
11, 12ம் வகுப்புகளுக்கு வழக்கம் போல ஆறு பாடங்கள் இருக்கும். ஐந்து பாடங்களாக குறைக்கப்படாது. அப்படி எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவே இல்லை . இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. வழக்கம் போல 6 பாடங்களும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நடைமுறையை பள்ளிக் கல்வித்துறை பின்பற்றும்” என தெரிவித்தார்.