Controversy circular On castes Identity Wrist Rope: பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளக் கயிறுகளை கட்டி வரக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் பழைய நடைமுறையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளத்தைக் குறிக்கும் வகையில், குறிக்கும் வகையில், தங்கள் கைகளில் வண்ணக் கயிறுகளை கட்டி வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை ககஸ் 12 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு திமுக எம்.பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்தனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சாதிய அடையாளங்களுடன் பள்ளிகளில் கயிறு கட்டக்கூடாது என்ற பள்ளி கல்வித்துறையின் சுற்றறிக்கையை அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் சாதி அடையாள கயிறுகள் கட்டக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அந்த சுற்றறிக்கை எனது கவனத்துக்கு வராமல் வெளிவந்துள்ளது. இதில் பழைய நடைமுறையே தொடரும்” என்று கூறினார்.
பள்ளி மாணவர்கள் சாதி அடையாள கயிறுகளை கட்டி வரக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் தனக்கு எதுவும் தெரியாது என கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் செங்கோட்டையன் கூறியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் ஆனால், அனைவரும் சாதிகளை ஒழிக்க பாடுபட வேண்டும் எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “பள்ளிகளில் இந்து மத நம்பிக்கை சார்ந்த கயிறு கட்டுவதற்கும், நெற்றியில் திலகமிட்டுக்கொள்வதற்கும் தடையில்லை. ஆனால் நேற்றைய முன்தினம் அமைச்சர் அவர்களை கலக்காமல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது என்றும் கூறியுள்ளார். எனவே இந்துமத உணர்வுகள் காயப்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாள கயிறுகள் கட்டி வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியது பற்றி தனக்கு தெரியாது என்று அத்துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், எச்.ராஜா பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தெரியாமல் சுற்றறிக்கை அனுப்பிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது இந்த விவகாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.