அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிகிச்சைக்குப் பிறகு அவரை விசாரணைக்காக டெல்லிக்கு அமலாக்கத்துறை கொண்டு செல்லாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Advertisment
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாகத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைக் கேள்விப்பட்டு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘செந்தில் பாலாஜி சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விவகாரத்தை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் மிரட்டல் அரசியலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை. தேர்தல் நெருங்க நெருங்க இதுபோல பல வேலைகளை மத்திய அரசு செய்யும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை பயன்படுத்திக்கொள்வதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வாழ்த்துகள் என்று கூறினார்.
மேலும் அமைச்சர் பொன்முடி, ’பா.ஜ.க ஆளாத மாநிலங்களின் ஆட்சியை பழிவாங்கும் நடவடிக்கைதான் இது. டெல்லி, மேற்குவங்கம், கர்நாடாகாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் ஒன்றிய அரசு இதை செய்திருக்கிறது. எது நடந்தாலும் அதை எதிர்கொள்வோம்’ என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க நெருக்கடிகளை கொடுத்துவருகிறது என திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“