/indian-express-tamil/media/media_files/2025/02/27/qTqu9OZsX1sXySSFEdCP.jpg)
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கைகளை ஒரே வழக்கில் இணைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், 2011 முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மேல்விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றமும் முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர்.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி இளந்திரையன், மனுவுக்கு மார்ச் 13ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.