Advertisment

கடன் பெற்று ஆட்சி நடத்துகிறார்கள்... பட்ஜெட்டை விமர்சித்த இ.பி.எஸ்-க்கு தங்கம் தென்னரசு பதிலடி

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை விமர்சித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “கடன் சுமை ஏறிக்கொண்டே போனதுதான் 10 ஆண்டுகால அ.தி.மு.க அரசின் சாதனை” பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Thangam thennarasu eps

அமைச்சர் தங்கம் தென்னரசு - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை விமர்சித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு,  “கடன் சுமை ஏறிக்கொண்டே போனதுதான் 10 ஆண்டுகால அ.தி.மு.க அரசின் சாதனை” பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை (19.02.2024) தாக்கல் செய்தார். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் முந்தைய 3 நிதி நிலை அறிக்கைகளை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.  தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மாபெரும் 7 தமிழ்க் கனவு என்று தாக்கல் செய்யப்பட்டது. 

நிதி நெருக்கடி, இயற்கைப் பேரிடர், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நடுவில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் உயர்ந்துள்ளது. வரவு செலவு திட்டத்தில் குளறுபடி உள்ளது. அ.தி.மு.க ஆட்சியை விட தற்போது கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. தி.மு.க அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது; கடன் பெற்றே ஆட்சியை நடத்துகிறார்கள். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்கள். எப்போதும் போல்தான் அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க அரசின் பட்ஜெட் என்பது கானல் நீர் போன்றது; மக்களுக்கு பயன் தராது” என்று விமர்சனம் செய்தார். 

கடன் பெற்றே ஆட்சியை நடத்துகிறார்கள் என்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை விமர்சித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். “கடன் சுமை ஏறிக்கொண்டே போனதுதான் 10 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனை. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை.” என்று தங்கம் தென்னரசு கடுமையாக பதில் அளித்துள்ளார். 

இது தொடர்பாக நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திராவிட இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட, எல்லோருக்கும் எல்லாமுமான, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு அளிக்கும் பட்ஜெட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு தாக்கல் செய்திருக்கிறது. இதனால், கொதிநிலைக்குப் போயிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 'கனவு பட்ஜெட்; மக்களுக்குப் பயன் தராது' எனப் புலம்பியிருக்கிறார். 

'தி.மு.க அரசுக்கு 8,33,361 கோடி கடன் உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது' எனச் சொல்லியிருக்கிறார். தி.மு.க-வின் கனவு பட்ஜெட்.. கானல் நீர்.. ரூ.8 லட்சம் கோடி கடன்.. போட்டு தாக்கும் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர் மாளிகையின் பரணில் தூக்கிப் போடப்பட்டிருக்கும் அ.தி.மு.க-வின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள். அதையெல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், 8-ஆம் பக்கத்தை மட்டுமாவது கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். 'ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக்குனிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு, தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும், வழிவகை செய்யப்படும்' என வாக்குறுதி அளித்திருந்தீர்கள். அந்தத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை. நடப்பது மக்களாட்சியா... இல்லை மன்னராட்சியா எனச் சந்தேகம் கொள்ளும் வகையில் சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் துதி பாடிக் கொண்டிருந்தார்கள். எதார்த்தத்துக்கு வராமல் ஜெயலலிதாவையும், பழனிசாமியையும் குளிர்விப்பதற்கே தமிழக சட்டமன்றம் பயன்பட்டது. 

2011 - 2012-ம் ஆண்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக இருந்த கடனைப் படிப்படியாக உயர்த்தி 2020-2021-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள். 'கடன்' என்ற சொல்லுக்குக் 'கடமை' என்ற பொருளும் உண்டு. ஆனால், கடமையைச் செய்யத் தவறிக் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் பத்தாண்டு அ.தி.மு.க அரசின் சாதனை. 'ஒரு மாநில அரசு, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு மேல் கடன் வாங்க முடியாது. அதே சமயம் எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாக 25 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது' என்கிறது மத்திய நிதி கமிஷன். இந்த வரம்பைத் தமிழ்நாடு அரசு இன்னும் தாண்டவில்லை. ஓர் அரசு கடன் வாங்குவதில் தவறு இல்லை. உலகம் எங்கும் அரசுகள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அப்படிப் பெறப்படும் கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அப்படியான அரசாக தி.மு.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

'வருஷா வருஷம் கடன் வாங்கித்தான் இந்த அரசு வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கு' என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. பத்தாண்டு கால அ.தி.மு.க அரசும் அதைத்தானே செய்து கொண்டிருந்தது. தி.மு.க அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை? 2014-இல் டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் 54 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்தாண்டில் 205 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறதே அதைப் பேசப் பழனிசாமி வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்? பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி, அது உண்மையென்றால் மத்திய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே? பழனிசாமி அளித்த அந்தப் பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். "அ.தி.மு.க. ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க ஆட்சியில் வருகிறது" எனச் சொல்லியிருக்கிறார். அதாவது வருவாயைப் பெருக்கும் பணியைத் தி.மு.க அரசு செவ்வனே செய்து வருகிறது என அவரே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். கடனை அடைக்க வருவாயைப் பெருக்கும் வழியையும் மு.க.ஸ்டாலின் அரசு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாகக் கடனை அடைக்கும் வழிகளை இன்னும் சிறப்பாக இந்த அரசு மேற்கொள்ளும். 

"தி.மு.க. அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது; மக்களுக்குப் பயன் தராது' எனச் சொல்லியிருக்கிறார். அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள். கடந்த காலங்களில் அ.தி.மு.க.வின் பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மறந்துவிட வேண்டாம்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thangam Thennarasu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment