சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடக்க உறுதுணையாக இருந்த தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவருந்தி கௌரவித்த நெகிழ்ச்சியான நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் முதல்முறையாக ஃபார்முலா 4 கார் பந்தயம் (Formula4 Chennai Racing Street Circuit) எனும் இரவு நேர கார் பந்தயம் தமிழக அரசின் சார்பில் தீவுத்திடல் சுற்றுவட்டச் சாலையில் நடைபெற்றது.
ஃபார்முலா 4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடந்ததில் தமிழ்க அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிறப்பான பணியாற்றினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடக்க உறுதுணையாக இருந்த தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவருந்தினார். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “உலகமே போற்றுகிற வகையில் சென்னையில் நடத்தப்பட்ட Formula4 Chennai Racing Street Circuit – இரவு நேர கார் பந்தயத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்த தமிழ்நாடு விளையாட்டுத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, பெருநகர சென்னை காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, சி.எம்.டி.ஏ, தமிழ்நாடு சுற்றுலாத் துறை, சென்னை மெட்ரோ வாட்டர், தமிழ்நாடு சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் – அலுவலர்கள் - பணியாளர்களுக்கான நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
தெற்காசியாவிலேயே முதன்முறையாக நடைபெற்ற இப்பந்தயம் சிறக்க இரவு – பகல் பாராமல் உழைத்த அனைவரையும் பாராட்டி நினைவுப் பரிசுகள் - பாராட்டுச் சான்றிதழ்ளை வழங்கி நன்றி தெரிவித்தோம்.
களப்பணியாற்றிய தூய்மைப்பணியாளர்கள் – போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்டோருடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டோம்.
சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் (ChennaiFormula4) எனும் வரலாற்றில் இடம்பெற்றுள்ள அவர்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்ந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“