தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் அனைவரின் முன்பாகவும் “ உதயநிதி ஸ்டாலின் எனும் நான் “ என்று கூறி பதவியேற்றார். இந்நிலையில் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் “ இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். மாமன்னன் தான் கடைசி படம். என்னிடம் இருக்கும் குறைகளை பத்திக்கையாளர்கள் எடுத்து கூற வேண்டும். வாரிசு என்று விமர்சிப்பவர்களுக்கு எனது செயல்களும் உழைப்பும் பதில் கொடுக்கும்” என்றார்.
மேலும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதுடன் சேர்த்து 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபுக்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு. அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு, அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை, அமைச்சர் மதி வேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.