புதுக்கோட்டை மாவட்டம், விறாலிமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சன் டிவி மைக்கை மேஜையில் இருந்து தூக்கி எறிந்து பேட்டி கொடுக்கமாட்டேன் என்று கூறியது பத்திரிகையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அவருடைய செய்தித்தொடர்பாளர் செய்தியாளர்களை அழைத்ததன் பேரில் அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகச் செய்தியாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரின் அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்றனர்.
செய்தியாளர்களை சந்தித்து பேச வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், பேட்டி அளிப்பதற்கு முன்னதாக, சன் டிவிக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என்று கூறி, சன் டிவி மைக்கை தூக்கி எறிந்தது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கும் ஊடகத்தினருக்கும் அதிர்ச்சி அளித்தது.
அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட மேஜையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி மைக்குகளில் சன் டிவி மைக்கைப் பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர், “வேணா... சன் டிவிக்கு நான் பேட்டி குடுக்க மாட்டேன். சன் டிவி மைக்கை எடுத்துடுங்க...” என்று சன் டிவி மைக்கை எடுத்து ஓரமாக தூக்கி எறிந்துவிட்டார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளிக்க உள்ளதாக அழைப்பு விடுத்துவிட்டு சன் டிவி செய்தியாளரை வெளியேறச் சொன்னதுடன் சன் டிவி மைக்கை தூக்கி எறிந்தது குறித்து பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஜயபாஸ்கர் சன் டிவிக்கு பேட்டி கொடுக்கமாட்டேன் என்று கூறி மைக்கை தூக்கி எறிந்ததற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, விஜயபாஸ்கர் வீட்டு சீர் என்ற பெயரில் அவருடைய தொகுதியில் வீடு வீடாக பொங்கல் பரிசு வழங்கியதை சன் டியில் செய்தியாக வெளியிட்டதால் அவர் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. சன் டிவி செய்தியாளரிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் இப்படி அத்துமீறி நடந்துகொண்டதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது சன் டிவி மைக்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துக்கி வீசியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பத்திரிகையாளர் சந்திப்பின்போது சன் டிவி மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் அமைச்சர் விஜய பாஸ்கர். அதிமுக அமைச்சரவையையே மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது. ஊடகங்களை மிரட்டுவதும், மமதையும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான். மக்களின் எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும்” என்று தெரிவித்துள்ளர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"