/tamil-ie/media/media_files/uploads/2017/08/Chennai-high-court-2.jpg)
தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண், முகவரி, மின் அஞ்சல் முகவரிகள் மாயமானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் திடீரென கடந்த மாதம் 21-ம் தேதி நீக்கப்பட்டன. இதை எதிர்த்து மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து தகவல் வழங்கும் ஆதாரமாக அரசு இணைய தளம் விளங்குகிறது. ஆனால் எந்த காரணமும் தெரிவிக்காமல் அதில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் அலுவலக முகவரி உள்ளிட்ட விவரங்களை நீக்கியது சட்டவிரோதமானது. மேலும் பொறுப்பான அதிகாரி, இச் செயலை செய்திருக்க மாட்டார். இந்த செயல் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும், வெளிப்படை தன்மைக்கும் எதிரானது. எனவே, அந்த விவரங்களை மீண்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக நீக்கப்பட்டதா? இல்லை வேறு ஏதாவது காரணத்துக்காக நீக்கப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரம் குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்டு அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வருகிற 21-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.