அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு எதிரான வழக்குகளில் மீண்டும் விசாரணையைத் தொடங்க வேண்டும் எனவும் தினந்தோறும் அடிப்படையில் வழக்கு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உத்தரவிட்டது.
கடந்த 2006 - 2011 வரையில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011 - 2012-ம் ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறை சார்பில், இருவர் மீதும் தனித் தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்குகளில் இருந்து, அமைச்சர் தங்கம் தென்னரசுவை 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதமும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதமும் வழக்கில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருவரையும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இவர்களுக்கு எதிரான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆகஸ்ட் 7-ம் தேதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணை தினந்தோறும் அடிப்படையில், எந்தவித தலையீடுகளும் இல்லாமல் நடைபெறுவதை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவருடைய மனைவி டி. மணிமேகலை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரொத்தகி, தங்கம் தென்னரசு மனைவி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு ஷிங்வி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார்கள்.
விசாரணைக்குப் பின்னர், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்; இருவரும் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“