அழகி போட்டிகளில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. தமிழ் பெண்களுக்காகவே நான் நடத்தும் அழகி போட்டியை தடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவரும், நடிகையுமான மீரா மிதுன், சென்னை போலீளு் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் மீரா மிதுன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நான் மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் குயின் ஆப் சவுத் இந்தியா உள்ளிட்ட பட்டங்களை வென்றுள்ளேன். 2 தமிழ்ப்படங்களில் நடித்துள்ளேன். மிஸ் தமிழ்நாடு மண்டல இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளேன்.
நான், அஜித் ரவி என்பவருடன் இணைந்து அழகிப்போட்டிகளை நடத்தியுள்ளேன். கருத்து வேறுபாடு காரணமாக, அஜித்ரவி பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், ஜூன் 3ம் தேதி, மிஸ் தமிழ்நாடு டிவா 2019 என்ற பெயரில், அழகிப்போட்டி நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்தேன். இதனை தடுக்கும் வகையில், அஜித் ரவி, ஜோ மைக்கேல், பிரவீன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எனது மொபைல் போன், பேஸ்புக், டுவிட்டர் அக்கவுண்ட்களை முடக்கி அதன்மூலம் தவறான தகவல் பரப்பிவருகின்றனர். நான், இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்பதற்காக 2 பேரும் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கின்றனர். போலீஸ் அதிகாரிகள் மூலமும் எனக்கு அவர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். சம்மன் இல்லாமல், போலீஸ் ஸ்டேசனிற்கு விசாரணைக்கு அழைக்கின்றனர். மிரட்டல் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அழகி போட்டிகளில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. தமிழ் பெண்களுக்காகவே நான் நடத்தும் அழகி போட்டியை திட்டம்போட்டு தடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை நடத்த உதவியாக இருக்கும் விளம்பரதாரர்களையும் அவர்கள் மிரட்டுகின்றனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது நிகழ்ச்சி நடக்கும் தனியார் ஹோட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மீரா மிதுன் அந்த மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.