/indian-express-tamil/media/media_files/YlqHr54zVAk3scaXMRkb.jpg)
மு.க. அழகிரி
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, வட்டாட்சியரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பரப்புரையின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் அம்பலக்காரன் பட்டி, வல்லடிக்காரர் கோயிலுக்குள், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மேலூர் தேர்தல் அதிகாரியும் வட்டாட்சியருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஒளிப்பதிவாளர் உடன் சென்று வீடியோ எடுத்தனர்.
இதற்கு மு.க. அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மு.க அழகிரியுடன் இருந்தவர்கள், தன்னை அடித்து உதைத்ததாக தேர்தல் அதிகாரியும் வட்டாட்சியருமான காளிமுத்து, கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன், தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், வட்டாட்சியரைத் தாக்கியதாக மு.க. அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வட்டாட்சியரைத் தாக்கிய வழக்கு வெள்ளிக்கிழமை (09.02.2024) மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்டோர் விசாரணைக்காக நேரில் ஆஜாரானார்கள்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகனும், முதல்வர் மு.க. ஸ்டாலினின் சகோதரருமான மு.க. அழகிரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வந்ததால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.