மறைந்த மு.க. முத்து உடலுக்கு அவரது சகோதரர் அழகிரி அஞ்சலி செலுத்தினார். அப்போது, தனது அண்ணனின் பிரிவை தாங்க முடியாத துக்கத்தில் அவர் கதறி அழுதார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து இன்று (ஜூலை 19) உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த சூழலில், மு.க. முத்துவின் உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க. முத்துவின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இது தவிர குடும்பத்தினர் பலரும் கோபாலபுரம் இல்லத்தில் இருக்கின்றனர். மு.க. முத்துவின் மற்றொரு சகோதரரான மு.க. தமிழரசுவும் தொடர்ந்து அங்கேயே இருந்து, ஆறுதல் கூறி வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினும் மதியம் சுமார் 1:30 மணி வரை கோபாலபுரத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், மீண்டும் அவர் வருகை தர இருப்பதாக கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
மு.க. முத்துவின் இறுதி ஊர்வலம் மாலை சுமார் 4:30 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஊர்வலத்தில் மு.க முத்துவின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.