கொடிய நோயை ஏற்படுத்தக் கூடிய போதைப் பொருளான குட்காவை தமிழகத்தில் விற்பதற்கு மாதா மாதம் மாமுல் வாங்கப்பட்டதைவிட மானக்கேடு தமிழ்நாட்டுக்கு வந்துவிடப் போவதில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர்- கண்ணம்பாளையத்தில் இயங்கி வந்த குட்கா ஆலை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக நிர்வாகிகள் 7 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். திமுக நிர்வாகிகள் கைதைக் கண்டித்து கோவையில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஸ்டாலின், "குட்கா பிரச்சனைக்காக திமுக போராட்டம் நடத்த முன்வந்திருக்கிறது என்றால், அது இந்த பகுதி மக்களுக்காக மட்டும் இல்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும் தான். கோவை குட்கா ஆலையில் நடத்தப்பட்ட சோதனை எதற்கு நடந்தது என்றால், அனுமதி பெறாத நிலையில், ஏற்கனவே தடை செய்யப்பட்ட குட்காவை, ஆலையில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். திடீரென்று இந்த ஆலையை ஏன் அடைக்க வேண்டும்? இந்த அவசியம் ஏன் வந்திருக்கிறது என்றால், ஏற்கனவே குட்கா பிரச்சனை என்பது பூதாகரமாக உள்ளது. இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், குட்கா விவகாரத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, கோவை குட்கா குடோனில் 18 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு மாதவரத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட குட்கா டைரியில், குட்கா விற்பனையில் யார் யார் சம்பந்தப்பட்டிருப்பார்கள்? யார் யாருக்கு எவ்வளவு கோடி ரூபாய் மாமுல் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நல்வாழ்வுத் துறை அமைச்சரான விஜயபாஸ்கரோ, கொடிய புற்றுநோய் வரக்கூடிய போதைப் பொருள் விற்பனைக்கு துணை போயிருக்கிறார். குட்காவை தடை செய்து பல ஆண்டுகளாகிறது. தடை செய்யப்பட்ட போதைப் பொருளை தமிழகத்தில் சுதந்திரமாக விற்பதற்கு மாதா மாதம் மாமுல் வாங்கியதைவிட மானக்கேடு சம்பவம் தமிழ்நாட்டுக்கு வந்துவிடப் போவதில்லை" என்றார்.