கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்தில் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான சிந்தனையை தூண்டும் வகையில் அமைந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்? முஸ்லீம்கள் யார்? தலித் என்றால் என்ன? தலித் தலைவர் யார்? என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
தலித்துகள் என்பதன் பொருள் என்ன?
கேள்விக்கு விடையாக “அந்நியர்கள், தீண்டத்தகாதவர்கள்,
நடுத்தர வர்க்கத்தினர், உயர் வகுப்பினர்” என்று பதில் தரப்பட்டுள்ளது. இந்த நான்கில் ஒன்றை மாணவர்கள் பதிலாக குறிப்பிட வேண்டும்.
பொதுவாக முஸ்லிம்களின் பண்பு என்ன?
என்ற கேள்விக்கு, “முஸ்லிம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள், நோன்பு காலங்களில் தூங்குவதில்லை” என்று பட்டியல் தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்’ என பதிவிட்டு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அதேபோல், டிடிவி தினகரன் தனது ட்வீட்டில், "சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ 6ம் வகுப்பு சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பகுதிகளை உடனடியாக நீக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இத்தகைய கருத்துகளோடு இளம் வயது மாணவர்களுக்குப் பாடங்களைத் தயாரிப்பதும் , அதனை அடிப்படையாக கொண்டு தேர்வில் கேள்விகள் கேட்பதும் தவறானது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், "முஸ்லீம்கள் குறித்தும் பட்டியல் இனத்தவர் குறித்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாளில் தவறாக சித்தரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை. சமூக வலைத்தளவாசிகள் போலியான கேள்வித்தாளை பரப்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்" என கேந்திரிய வித்யாலயா விளக்கம் அளித்துள்ளது.