மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மவுனித்திருக்கிறது ஒன்றிய அரசு என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மேலும், “இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள். மீனவர்கள் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசு உணரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களின் சிக்கலைப் போக்க பல்வேறு கடிதங்களும், கோரிக்கைகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகளை சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மீனவர்களின் பிரச்னைக்கு பொருளாதார தீர்வு காணும் திட்டங்களை, தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ், அறிவிப்புகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
குறிப்பாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.360 கோடியில் மீன்பிடித் துறைமுகங்கள், ரூ.216.73 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.
அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மவுனித்திருக்கிறது ஒன்றிய அரசு.
எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.