அண்ணா பெயரை உச்சரிக்க கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? வெடித்த ஸ்டாலின்– இ.பி.எஸ். வார்த்தை போர்

’இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், "அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது' என்கிறார்.

’இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், "அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது' என்கிறார்.

author-image
WebDesk
New Update
mk stlain

Who Has the Right to Utter Anna's Name? The Stalin-EPS Word War Erupts!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ”தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக படாத பாடுபடுகிறது. அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது, இந்த மண், தந்தை பெரியார் பண்படுத்திய மண். பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தபட்ட மண். மறைந்த முதல்வர் கருணாநிதியால் வளர்க்கப்பட்ட மண். இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள். அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்.

Advertisment

அண்ணா பெயரையே, அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். இன்றைக்கு, கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள், நாளைக்கு, தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாடும், தன்மானமுள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்துக்கு எதிரானவர்களுக்கும் எதிரிகளுக்கு துணை போகும் துரோகிகளுக்கும் ஒருசேர பாடம் புகட்ட வேண்டும்,” என்று பேசினார்.
 
முதல்வரின் இந்த பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தன் X பக்கத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; ’இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், "அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது" என்கிறார். அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?

Advertisment
Advertisements

"அண்ணா- இதய மன்னா" என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுக-வை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் அஇஅதிமுக.

ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்?

கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்! தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்! திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்!

இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி!

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: