திருச்சியில் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.25 லட்சம் நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
திருச்சி அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீதர் (45). இவர் கடந்த ஜூலை 30-ம் தேதி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த கார் மோதியதில் காயமடைந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
பணியில் இறந்த காவலர் குறித்து வேதனை அடைந்ததாகவும், தலைமைக் காவலர் ஸ்ரீதர் உயிர் இழந்திருப்பது காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள், ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார்.
அப்போது அவர், கடந்த மாதம் 30-ந் தேதி அரிஸ்டோ மேம்பாலத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமைக் காவலர் ஸ்ரீதரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை நேரில் வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாநகர காவல்துறை ஆணையர் காமினி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”