மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்த ஸ்டாலின் கண்ணீருடன் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
மெரினா சென்ற ஸ்டாலின்:
திமுகவின் ஆலமரமாக இருந்த அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று முன்தினம் காலமானர். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 7 ஆம் தேதி சரியாக 6.10 மணிக்கு உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
அவரின் இறப்பு செய்தி திமுக தொண்டர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு இடியாக அமைந்தது. லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் கருணாநிதியின் உடல் அவரின் விருப்படி மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் வைக்கப்பட்டது.
அனைத்து கட்சி தலைவர்கள், திரையுலகினர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரண்டு வந்து கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்றைப்போல் இன்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மெரினா படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கருணாநிதியின் மகனும், திமுகவின் செயல் தலைவருமான ஸ்டாலின் விடிந்ததும் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக உறுப்பினர்களுடன் சென்ற ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த ஆ. ராசா மற்றும் மா சுப்பிரமணியம் போன்றோர் அவரை கட்டி அனைத்து தேற்றினர்.
ஸ்டாலின் கருணாநிதி சமாதியில் மலர் அஞ்சலி
அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள் அனைவரும் கலைஞர் கலைஞர் என்று கோஷம் எழுப்பினார்கள். ஸ்டாலின் நெருக்கமானவர்கள் பலரும் இரவு முழுவதும் தனது தந்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டு ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களுடன் புலம்பியதாகவும் காலை விடிந்ததும் உடனே மெரினா செல்ல வேண்டும் என்று கூறி புறப்பட்டதாக கூறியுள்ளனர்.