ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் நடப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவை சில வாரங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த ஆடியோவில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ரூ. 30,000 கோடி சொத்து சேர்த்ததாக அவர் பேசியிருதார்.
இந்நிலையில் இதற்கு அண்ணாமலை விளக்கம் கேட்டார். இதுதொடர்ந்து விளக்கம் அளித்த நிதியமைச்சர், ’இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்ட ஒன்றும் முதல்வருக்கும், தனக்கும் பிரிவினை ஏற்படுத்தவே இது செய்யப்படுகிறது என்று கூறினார். மேலும் நவீன தொழில்நுட்பத்தால் எப்படி பல்வேறு தலைவர்கள் பேசியதை மாற்ற முடியும் என்ற செய்திகள் விவரிக்கும் வீடியோவை வெளியிட்டார்.
இந்த ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் இரண்டு முறை முதல்வரை சந்தித்தார். இந்நிலையில் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், பழனிவேல் தியாகராஜன் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் இந்த ஆடியோ தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். ’உங்களில் ஒருவன் பதில்கள்’ நிகழ்வில், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெயரில் வெளியான ஆடியோ குறித்து சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் “ இந்த விவகாரம் தொடர்பாக பழனிவேல் தியாகராஜனே இரண்டு முறை விளக்கம் கொடுத்துவிட்டார். மக்களுக்கான பணியை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கும். இதுபற்றி பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விருமப்வில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“