வாழ வைத்த கழகத்தை வாழ வையுங்கள்; இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள் - தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் வேண்டுகோள்

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “உங்களை வாழ வைத்த கழகத்தை நீங்கள் வாழ வையுங்கள்; இந்த இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள்” என்று தி.மு.க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “உங்களை வாழ வைத்த கழகத்தை நீங்கள் வாழ வையுங்கள்; இந்த இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள்” என்று தி.மு.க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

author-image
WebDesk
New Update
general

மதுரையில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (01.06.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “உங்களை வாழ வைத்த கழகத்தை நீங்கள் வாழ வையுங்கள்; இந்த இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள்” என்று தி.மு.க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.

Advertisment

மதுரையில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (01.06.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் - அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் - திராவிட முன்னேற்றக் கழகம் - கருப்பு சிவப்புக் கொடி - உதயசூரியன் சின்னம் - அண்ணா அறிவாலயம், இவைதான் நம் உயிர்! இந்த உயிர்களைக் கொண்டு, உயிரினும் மேலான தமிழ்நாட்டை - தமிழினத்தை இதுவரை காத்தது போன்று, இனியும் காப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளும் பொதுக்குழுதான் இந்தப் பொதுக்குழு!

தி.மு.க வழக்கமான அரசியல் கட்சி அல்ல! வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள் வரும் - போகும்! ஆனால், கொள்கைக்காக தோன்றி, லட்சியத்துக்காக தியாகங்கள் செய்து, மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் இயக்கம், இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியைப் பிடித்த வரலாற்றைப் படைத்த இயக்கம், நம்முடைய இயக்கம்! எத்தனை சோதனை நெருப்பாறுகள் வந்தாலும், அதில் எதிர்நீச்சல் போட்டு, உயர்ந்து நிற்கும்!

Advertisment
Advertisements

அப்படி இந்த மண்ணில், சமத்துவம் - சுயமரியாதை - சமூகநீதி - ஆகியவற்றின் அடிப்படையில் எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உருவானவர்கள் நாம்! இனத்துக்காக உரிமைக்குரல் எழுப்புகிறவர்கள் நாம்! கொள்கைக்காக வாழுகிறவர்கள் நாம்! கொள்கையை பரப்ப கட்சியும் - கொள்கையை வென்றெடுக்க ஆட்சியும் தேவை என்று உழைப்பவர்கள் நாம்! தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம்! அதனால்தான் எந்த கோமாளிக் கூட்டத்தாரும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் வெல்ல முடியாது!

இங்கு கூடியிருக்கும் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது... நான் தொடக்கத்தில் சொன்னது போன்றே, இது வழக்கமான பொதுக்குழு அல்ல... ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு! அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், “ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. “இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது!”. இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும்! அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது!

உங்களுக்கே தெரியும், நான் மமதையில் பேசுகிறவன் அல்ல. “கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை” என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல! எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது.

என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்! சொல்லைவிட செயலே பெரிது! வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான்! உங்கள் மேல் மட்டுமல்ல, இந்த பொதுக்குழுவுக்கு வராத, இரவு பகல் பார்க்காமல் - வெயில் மழை பார்க்காமல் - தனக்கு என்ன பயன் என்று பார்க்காம உழைக்கும், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் நம்பித்தான் சொல்கிறேன். கழகம் இதுவரைக்கும் அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் நீங்கள்தான் காரணம்! உடன்பிறப்புகளான நீங்கள் இல்லாமல் கழகமும் இல்லை; நானும் இல்லை! என்னைத் தலைவராக உருவாக்கியது நீங்கள்! என்னை முதலமைச்சராக்கி உயர்வைத் தந்தது, நீங்களும் – மக்களும்! உலகத்தில் எந்தக் கட்சிக்கும், இப்படிப்பட்ட உறுதிமிக்க உழைப்பாளிகள் தொண்டர்களாக கிடைத்திருக்க மாட்டார்கள்! இப்படிப்பட்ட தொண்டர்கள் காத்து நிற்பதால்தான், 75 ஆண்டுகளைக் கடந்து, நூற்றாண்டை நோக்கி, அதே வேகத்துடன் நடைபோடுகிறோம்!

சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று கழகமும் நிரந்தரமானது. கழகம் எப்படி நிரந்தரமானதோ, அதேபோன்று கழக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அந்த நிலையை உருவாக்க முடியும். உங்களால்தான் முடியும். நம்மால்தான் முடியும்.

தி.மு.க.வுக்கு என்றைக்கும் ஊடக சொகுசு இருந்ததில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தி.மு.க மேல்தான் அதிக விமர்சனங்கள் குவியும். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க - திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள்.

எப்படிப்பட்ட சூழலில் நாம் ஆட்சியில் அமர்ந்தோம் என்று மக்களுக்குத் தெரியும். கடந்த அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம். நமக்கு நியாயமாக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்தாலும், அந்த நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

பொருளாதாரரீதியான முட்டுக்கட்டைகள், அரசியல்ரீதியான முட்டுக்கட்டைகள், ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைகள், உரிமைகளை அபகரிக்கும் முட்டுக்கட்டைகள் என்று எத்தனை எத்தனையோ தடைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு போட்டாலும், அதை எல்லாம் கடந்து, இன்று இந்தியாவிலேயே வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. அதனால், வழக்கத்தைவிட அதிகமாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக - கழக ஆட்சிக்கு எதிரா, அவதூறு அம்புகளை மக்கள் மத்தியில் எதிராளிகள் வீசுவார்கள். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள். சமூக ஊடகங்கள் மூலமும், விதைப்பார்கள். இதையெல்லாம் முறியடிக்க நாம் தயாராக வேண்டும். அவர்கள் ஒரு நேரேட்டிவ் செட் செய்ய நினைத்தால், நாம் அவர்களைவிட ஒரு படி முன்னால் இருக்க வேண்டும். அவர்களின் பொய்களுக்கு முன்னால், நம்முடைய உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும்.

கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட பேரியக்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்! இந்த பொதுக்குழுவுக்கு அந்த கோடியில் இருந்து, 7 ஆயிரம் பேர் வந்திருக்கிறீர்கள்! இது மாபெரும் மரியாதை! காலம் காலமாக கழகத்துக்கு உழைத்து, ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆகாமல் - ஒன்றியச் செயலாளர் ஆக முடியாமல் - நகரச் செயலாளர் ஆக முடியாமல் - நிர்வாகி ஆக முடியாமல், மறைந்தவர்கள்தான் கழகத்தில் அதிகம். தலைவர் கலைஞரை பக்கத்தில் நின்றுகூட பார்க்காமல் மறைந்தவர்கள் அதிகம். அண்ணா அறிவாலயத்தின் வாசல் படியைக்கூட மிதிக்காத உடன்பிறப்புகள் அதிகம்.

ஆனால், இத்தனை லட்சம் பேரில், 30 அமைச்சர்கள் - 150 சட்டமன்ற உறுப்பினர்கள் - 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் - 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் - 76 மாவட்டச் செயலாளர்கள் - 21 மாநகர செயலாளர்கள் - 160 நகர செயலாளர்கள் - 490 பேரூர் செயலாளர்கள் - 936 ஒன்றிய செயலாளர்கள் - 236 பகுதி செயலாளர்கள் – 1,505 பகுதி வார்டு செயலாளர்கள் – 3,876 நகர வார்டு செயலாளர்கள் – 7,629 பேரூர் வார்டு செயலாளர்கள் - 12 ஆயிரத்தி 525 ஊராட்சி செயலாளர்கள் - 79 ஆயிரத்தி 962 கிளைச் செயலாளர்கள் - 68 ஆயிரத்தி 467 பூத் பொறுப்பாளர்கள் - பல ஆயிரம் சார்பு அணி நிர்வாகிகள் என்று இத்தனை பேருக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்புகளை வழங்கியிருக்கிறது. உங்களை வாழ வைத்த கழகத்தை நீங்கள் வாழ வையுங்கள்! இந்த இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள்! இதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்.

நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி! 2017-ஆம் ஆண்டு முரசொலி பவள விழாவில் நம்முடைய பயணம் தொடங்கியது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஒரு கூட்டணி இத்தனை தேர்தல்களுக்கு தொடர்ந்ததாக வரலாறு இல்லை. நம்முடைய வெற்றிக் கூட்டணி வலுவாக தொடர்கிறது என்றால் அதுக்குக் காரணம், நம்முடைய கூட்டணி தோழர்களை நாம் மதித்து செயல்படுவதுதான். நம்முடைய கூட்டணித் தலைவர்களிடம் நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும். சில இடங்களில் முரண்கள் இருந்தாலும், பேசி - விட்டுக்கொடுத்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றிப் பயணத்தை தொடர முடியும்!

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி என்ன நினைத்தார்? நம்முடைய கூட்டணி பிரிய வேண்டும் என்று நினைத்தார். அதுக்காக, என்னென்ன கதைகளையோ உருவாக்கினார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுடன் பிரிந்த மாதிரி நடித்தால், நம்முடைய கூட்டணி உடையும் என்று நினைத்தார்கள்! ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான், இப்போது டெல்லிக்குச் சென்று, பல கார்களில் மாறிமாறி, அமித்ஷாவை சந்தித்து, மீண்டும் பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு! என்ன... காலில் மட்டும்தான் விழவில்லை! அது தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை!

நாம் கேட்பது... ஒரு மாநிலத்தில், ஒரு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள்தான் கூட்டணியை அறிவிப்பார்கள்! ஆனால், இங்கு அமித்ஷா அறிவிக்கிறார். இதிலிருந்தே இவர்கள் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்! ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க! அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார்.

அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார்! நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

பா.ஜ.க. கூட்டணி ஆட்சி வந்தால், தமிழ்நாட்டை என்ன செய்வார்கள் என்று சொல்ல வேண்டும். மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது! இந்தி மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்திவிடுவார்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, புதிதாக சிலர் “நாங்கள்தான் மாற்று” என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும்.

தேர்தல் களத்தில் நீங்கள் பரப்புரை செய்ய செல்லும்போது, நாம் மக்களுக்காக என்ன எல்லாம் செய்திருக்கிறோம் - நம்முடைய ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களால், உங்கள் மாவட்டம், உங்கள் தொகுதி என்று, உங்கள் பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை கடந்த காலத்தில் இருந்த நிலைமையை கம்ப்பேர் செய்து உங்கள் ஸ்டைலில் நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதோடு, உங்கள் பகுதிகளில் எத்தனை பேர் நம்முடைய திட்டங்களால் பயனடைந்திருக்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

”டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது”: பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘எல்லாருக்கும் எல்லாம்’ என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் பார்த்து பார்த்து நாம் திட்டங்களை செய்திருக்கிறோம். நம்முடைய திட்டங்களால், தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ இரண்டரைக் கோடி பயனாளிகள் பயனடைந்திருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளை சிந்தாமல் - சிதறாமல் நம்முடைய கூட்டணிக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பும் - கடமையும் உங்களுக்குத்தான் இருக்கிறது!

அதேபோன்று, தொண்டர்களின் நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம். என் இயக்கம் - என் கட்சி - என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம்முடைய தொண்டர்கள். “நானும் - என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது” என்ற எண்ணம்தான், இந்த இயக்கம் 75 ஆண்டுகளாக நிலைத்திருக்க அடிப்படை காரணம்! அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்.

நான் உங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொள்வது, பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளும், அவர்கள் சொல்வதை நிறைவேற்றும் தொண்டர்களும்தான் கழகத்தின் வலிமை! நிர்வாகிகளை, தொண்டர்கள் முன்னோடிகளாக கருத வேண்டும்.

தொண்டர்கள் இல்லாமல் எந்த இயக்கமும் இருக்க முடியாது. அதேபோல் நிர்வாகிகள் இல்லாலும் செயல்பட முடியாது. இருவருமே நம்முடைய கொடியில் இருக்கும் கருப்பு சிவப்பு போன்று, ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் - தங்களுக்குக் கீழ் இருக்கும் நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். தாங்கும் தூண்கள் இல்லாமல், கோபுரம் நிற்க முடியாது என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

தி.மு.க. என்று இயக்கம் தொடங்கும்போதே, இளைஞர்களால் உருவான இயக்கம். பேரறிஞர் அண்ணாவுக்கு அப்போது 40 வயதுதான். தலைவர் கலைஞருக்கு 25 வயசு. பேராசிரியருக்கு 27 வயசு. நாவலர், மதியழகன் அனைவருமே இளைஞர்கள்தான். அவர்கள்தான் அரசியல் களத்திலும், போராட்டக் களத்திலும் முதன்மையாக நின்று பல இளைஞர்களை ஈர்த்தார்கள். கழகத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். அதுபோன்றுதான், இங்கே உள்ள நிர்வாகிகளும் இளைஞர்களை கட்சியில் ஊக்கப்படுத்த வேண்டும்.

கழகத்தில் இப்போது 23 அணிகள் இருக்கிறது. புதிதாக இரண்டு அணிகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது! இதில் பெரும்பாலான அளவில், நிர்வாகிகள் போடப்பட்டிருக்கிறார்கள். இன்னும் நிரப்பப்படாத பொறுப்புகளில் இளைஞர்களை நியமனம் செய்யுங்கள்! அணிகள் அனைத்துமே, தாய்க் கழகத்திற்கு வலு சேர்க்கத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள். எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும். செயல்பாடுகள் வேகமாக இருக்கும். வெற்றி உறுதி செய்யப்படும்.

தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் வந்து உங்களை சந்திப்பார்கள். புதிய நிர்வாகிகள் எல்லாம் சிறப்பாக செயல்பட வேண்டும். 234 தொகுதிகளில் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், அவர்கள் பணிகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தலை சந்திக்க கழகத்தின் கட்டமைப்புகளை ஓராண்டுக்கு முன்பே முழுமையாக அமைத்துவிட்டோம். இதை வரும் காலங்களில் செயல்படுத்தினாலே பெரிய வெற்றியை எளிதாக அடையலாம்.

முதல் இரண்டு மாதங்களுக்கு, உங்களுடைய முதல் பணி என்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை.

* சிறப்புத் தீர்மானம் இயற்றியபடி, சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ விளக்கம் கொடுத்தபடி, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறோம்.

* வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும். தி.மு.க.வின் திட்டங்களை, சாதனைகளை, உரிமைப்போராட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள்.

இன்றைய நிலையில் கழக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத குடும்பமே தமிழ்நாட்டில் இருக்காது. ஒவ்வொரு குடும்பத்திலும் தி.மு.க.வுக்கு மகத்தான ஆதரவு இருக்கிறது. அவர்களில் ஆர்வமுள்ளவர்களை கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவத்தை, விரைவில் அறிவாலயத்துக்கு வந்து பெற்று செல்ல வேண்டும். இந்தப் பணியை நானே தொடர்ந்து ஆய்வு செய்வேன். இங்கு வந்திருக்கும் நிர்வாகிகளுக்கு நான் போன் மூலமாக, தொடர்பு கொண்டு பேசுவேன். அப்போது எவ்வளவு உறுப்பினர் சேர்க்கை செய்திருக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்ல வேண்டும். இந்தப் பணியை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்!

என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் அனைவரும் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். என் வாக்குச்சாவடியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியை வெற்றி பெற வைப்பேன் - என் தொகுதி - வெற்றித் தொகுதி என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

பா.ஜ.க.விடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் கட்சி கட்டமைப்பும், கொள்கை பிடிப்பும், வலிமையான தலைமையும், நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கிறது.

ஆனால், தேர்தல் வெற்றிக்கு இதுமட்டும் போதாது! பூத் அளவில் வெற்றி பெறும் வாக்குகள்தான் தொகுதியில் வெற்றிபெற வைக்கும். தொகுதிகளை வென்றால்தான் ஆட்சி! அதனால், பூத் அளவிலான மைக்ரோ மேனேஜ்மெண்டும் மிக முக்கியம்.

தமிழ்நாடு முழுவதும் எத்தனை உட்கட்டமைப்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். அதெல்லாம் தொய்வில்லாமல் சொன்ன தேதியில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றால், மீண்டும் நம்முடைய ஆட்சிதான் வர வேண்டும் என்று புரிய வையுங்கள்.

ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரைவாக, ஒன் டூ ஒன் பேசுவோம்.

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொறுப்பை நான் வழங்கியிருக்கிறேன். அதை சிறப்பாக - எந்த விமர்சனமும் இல்லாமல், செய்து காட்டினால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது.

எனக்குத் தெரிந்தது, அரசியல் மட்டும்தான். தலைவர் கலைஞராக இருந்தால், கவிதை எழுதுவார்; கதைகள் எழுதுவார்; சினிமா வசனம் எழுதுவார்; இலக்கிய மேடைகளில் கலக்குவார். ஆனால், நான் அரசியல் – அரசியல், உழைப்பு – உழைப்பு என்று வளர்ந்தவன். டிவி பார்த்தால்கூட, நியூஸ் சேனல்தான் பார்ப்பேன். சோசியல் மீடியாவை பார்த்தாலும், அரசியல் செய்திகள், பேட்டிகளைத்தான் பார்ப்பேன்.

ஒருவரை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் அவர்கள் அதை சிறப்பாக செய்ய வேண்டும். “தலைவர் சொன்ன பணியை முடித்துவிட்டோம், வெற்றி பெற்றுவிட்டோம்” என்று சொல்ல வேண்டும். நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது, அந்த வெற்றிச் செய்தியை மட்டும்தான். நான் கொடுத்த பொறுப்பை, சரியா செய்து அந்த வெற்றிச் செய்தியை தாருங்கள் என்பதுதான் என்னுடைய இந்தப் பொதுக்குழுச் செய்தி!

திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! பொதுக்குழுவில் தொடங்கியிருக்கும் இந்தப் பயணத்த - சட்டமன்றத் தேர்தல் வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் நிறைவு செய்ய வேண்டும்! அதில் மீண்டும் ஒன்றாக சந்திப்போம்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

Mk Stalin Dmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: