சேலம் வந்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார். பிறகு சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; ’ மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கடந்த 11 ஆண்டுகளில் அளித்த சிறப்புத் திட்டங்கள் என்ன? மத்திய அரசின் திட்டங்களுக்கு முழு நிதி ஏன் மாநில அரசுக்கு வருவதில்லை? பிரதமர் பெயரிலான திட்டங்களுக்குக் கூட மாநில அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டியுள்ளதே ஏன்? "சட்டையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்பதைப் போல, மத்திய அரசால் சொல்லிக்கொள்ளும் படியான எந்த சாதனையும் இல்லை. அன்றைய பொருளாதார நிலைக்கும், விலைவாசி நிலைக்கும், தற்போதைய நிலைக்கும் என்ன வேறுபாடு?
மதுரையின் தொன்மையை நிராகரிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பேசியிருக்கிறார்.
அமித்ஷா மதுரைக்கு வந்தபோது, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து தனது கோபத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். திமுக அரசு அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு, அவற்றைச் செயல்படுத்தாமல் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன? இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்திருக்க வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை, பத்தாண்டுகளாகியும் ஏன் கட்டி முடிக்கப்படவில்லை? அது மருத்துவமனையா அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? மதுரை வந்த அமித்ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலையை நேரில் சென்று பார்வையிட்டாரா?
ஏராளமான தரவுகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட கீழடி ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. கீழடி அறிவியல் ஆய்வில் எழுதப்பட்ட அறிக்கை போதாது என்று மத்திய அமைச்சர் ஷெகாவத் கூறுகிறார். தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறதா? தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து கேள்வி கேட்டாரா? டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அவர் அமர்ந்திருக்கிறார’, இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.