பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறதா ? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் தமிழக முதலவர் ஸ்டாலின் பேசுகையில், ” மிகவும் மகிழ்ச்சியாக உங்கள் முன் நிற்கிறேன். பெற்றோரின் பாசத்தோடு நான் தொடங்கிய திட்டம் காலை உணவுத்திட்டம். பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியை போக்கும் திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கும்போதிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தோம்.
சங்க இலக்கியத்தில் பசி பிணி போக்குவது குறித்து பல்வேறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் ஒரு வரப்பிரசாதம். காலை உணவு திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் ஒரு துளிகூட குறையக் கூடாது. நமது அரசு ஒரு நாளாவது செயல்படாமல் இருக்கிறதா? நாள்தோறும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.
பொய் செய்திகளை பரப்பி அதில் குளிர்காய நினைக்கும் மக்கள் விரோத சக்திகளின் அஜண்டா பலிக்காது. தமிழக மாணவர்கள் கல்வி பயில எந்த ரூபத்தில் தடை வந்தாலும், அதை தமிழக அரசு உடைக்கும். பசியோ, நீட் தேர்வோ, புதிய கல்விக் கொள்கையோ அது எந்த தடையாக இருந்தாலும் தகர்ப்போம்.
ஒன்றிய பா.ஜ.க அரசு அரசியலுக்காக அவசர நிலை பற்றி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசி வருகிறது. ஆனால் அவசர நிலையின்போது, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை, ஒன்றிய அரசு தற்போது மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா? இந்த ஆக்கப்பூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா?” என்று அவர் பேசினார்.