எம்.ஜி.ஆர் படங்களை முதல் ஆளாக டிக்கெட் வாங்கி பார்ப்பேன்; ஜானகி நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் பேச்சு
முன்னாள் முதல்வர் ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.ஜி.ஆர் படங்களை முதல் ஆளாக டிக்கெட் வாங்கி பார்ப்பேன் என்று எம்.ஜி.ஆர் உடனான இளைமைப் பருவ நினைவுகளைக் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.ஜி.ஆர் படங்களை முதல் ஆளாக டிக்கெட் வாங்கி பார்ப்பேன் என்று எம்.ஜி.ஆர் உடனான இளைமைப் பருவ நினைவுகளைக் கூறினார்.
Advertisment
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் எம்.ஜி.ஆர் மனைவியுமான ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் கல்லூரியில் புதன்கிழமை (நவம்பர் 30) நடைபெற்றது.
ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஜி.ஆர் எனும் நூலையும் வெளியிட்டார்.
பின்னர், நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்குரியவர் ஜானகி ராமச்சந்திரன். ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 20 ஆண்டு காலம் தி.மு.க-வில் பயணித்தவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க-வை விட தி.மு.க-வில் தான் எம்.ஜி.ஆர். அதிக காலம் இருந்தார். தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை, திமுகவிற்கு அழைத்து வந்தவர் கலைஞர்தான். எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது கலைஞர் தான்.
பள்ளிக் காலத்தில் நன்கொடை வசூலுக்காக முதலில் எம்.ஜி.ஆரிடம் செல்வேன். பெரியப்பா என்ற முறையில் நான் சொல்கிறேன். நன்றாகப் படிக்க வேண்டும் என எனக்கு அறிவுரை வழங்குவார்.
என் மீது அளவு கடந்த பாசத்தையும் அன்பையும் கொண்டவர் எம்ஜிஆர். என் மீது மட்டுமல்ல, என் குடும்பத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவர்.
எம்.ஜி.ஆர். படங்களை முதல்நாள், முதல் காட்சி பார்ப்பதே எனக்கு வழக்கமாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களை முதல் ஆளாக டிக்கெட் வாங்கி பார்ப்பேன். படம் வெளியான உடனே அதுகுறித்து என்னிடம் கருத்து கேட்பார்.” என்று எம்.ஜி.ஆர் உடனான தனது இளமைப் பருவ நினைவுகளைக் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழியை பாடமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"