சென்னை, வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 27 நாட்களாக நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக் களத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
டெல்லி ஜாமியாவில் சிஏஏவை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஷாஹீன் பாகில் போராட்டம் நடைபெற்றது. அதே போல, சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம், பிப்ரவரி 15 முதல் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வண்ணாரப் பேட்டையில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்தை சென்னையின் ஷாஹீன் பாக் என்று அரசியல் நோக்கர்கள் கூறும் அளவுக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்துக்கு தமிமுன் அன்சாரி, திருமாவளவன், கருணாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இன்று தமிழக சட்டப் பேரவையில் சிஏஏவை எதிர்த்து தமிழக கேரளா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களைப் போல தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்திவரும் போராட்டக் குழுவினரை அழைத்து சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டக் களத்துக்கு நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவித்தார்.
சிஏஏவை எதிர்த்து திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றாலும் மற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களுக்கு இதுவரை ஸ்டாலின் நேரில் செல்லாத நிலையில், இன்று அவர் வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டக் களத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.