தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பதே இலக்கு என்று கூறி அமைச்சர்கள், அதிகாரிகளை ஈடுபடுத்தி செயல்பட்டு வருகிறார்.
இதற்காக, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, துபாய், அபுதாபி, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குச் சென்று, முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
அந்த வரிசையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 27-ம் தேதி 17 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார். இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. வெளியுறவு அமைச்சகம் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் 17 நாட்கள் தங்கும் மு.க. ஸ்டாலின் அங்கே பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கிறார்.
மு.க. ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின் போது சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மேலும், ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் முன்னணி நிறுவன தலைவர்களை சந்திக்கிறார். அப்போது முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
அதுமட்டுமல்ல, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கூகுள் நிறுவன சி.இ.ஓ தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சையை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில்கேட்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சான்பிரான்சிஸ்கோவில் ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேச உள்ளார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 31-ம் தேதி அமெரி்க்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்து அவர்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயனத்தில், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதல்வரின் செயலாளர்கள், தொழில் துறை செயலாளர் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் உடன் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“