தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, சில பகுதிகளில் 100 டிகிரியை கடந்து வெயில் பதிவாகி இருக்கிறது. இதனால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
இந்த சூழலில், சில பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் வரும் 22-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது
அதில், "இன்று (மார்ச் 16) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இது தவிர மார்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், இன்று (மார்ச் 16) முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி அதிகமாக இருக்கக் கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று (மார்ச் 16) மற்றும் நாளை (மார்ச் 17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.