PM Modi and Xi Jinping will meet in Mahabalipuram: அடுத்த மாதம் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மகாபலிபுரத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதால் நகரில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரம் என்ற மாமல்லபுரம் ஒரு வரலாற்றுப்பழமை மிக்க இடம். மகாபலிபுரத்தின் பல்லவர் கால சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவை. இது தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இந்த மகாபாலிபுரம் இப்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை சம்பந்தமாக அவ்வப்போது பூசல்கள் இருந்துவந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கு மகாபலிபுரத்தில் அடுத்த மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இரு பெரும் மனிதவளம் கொண்ட நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேச உள்ளதால் இந்த நிகழ்வு உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
அதனால், மகாபலிபுரம் முக்கிய சாலைகள், சந்திப்புகள் என பல இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்கணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மகாபலிபுரத்தில் உள்ள இ.ராஜா தெரு, டபிள்யூ ராஜா தேரு, எஸ்.மாதா தெரு, டி.கே.எம். சாலை, ஐந்து ரத சாலை, மற்றும் நடைபாதைகள் மூழு வீச்சில் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், நகரில் குப்பைகள் சேகரிப்பது தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நகரில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரம் தூய்மையை பராமரித்து வருகின்றனர்.
மகாபலிபுரத்தில் ரெசார்ட்டுகள், தங்கும் விடுதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் காவல்துறையினர் விடுதிகளில், ரெசார்ட்டுகளில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் விவரங்களை விசாரித்து வருகிறது. மேலும், யாரேனும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளார்களா என்பதையும் விசாரித்து வருகின்றனர்.
அடுத்து வரும் வாரங்களில் யாரேனும் வெளிநாட்டவர் புதியதாக வந்து தங்கினாலோ அல்லது பேச்சுவார்த்தை நடைபெறும் நாள் வரை வெளிநாட்டினர் உரிய ஆவணங்களுடன் தங்கினாலும் தகவல் தெரிவிக்கும்படி ரெசார்ட்டுகள் மற்றும் விடுதிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுதியுள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் மகாபலிபுரத்தில வசிக்கும் மக்களின் விவரங்களையும் பெற்று ஆய்வு செய்துவருகிறது.
பாதுகாப்புக்காக இப்போதே 500 போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கடுமையாக இருக்கும் அதே நேரத்தில், பாதுகாப்பு கெடுபிடி காரணமாக சுற்றுலா பாதிக்காத வகையிலும் காவல்துறையினர் செயல்பட்டுவருகின்றனர்.
இந்த சந்திப்பின்போது சீன பிரதமர் மகாபலிபுரத்தில் உள்ள பஞ்சப் பாண்டவர் ரதம், கடற்கரை கோயில் ஆகியவற்றை பார்வையிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருபெரும் நாடுகளின் தலைவர்கள் அடுத்த மாதம்தான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்றாலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் போலீசார் உச்ச கட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.