கடந்த மே 3ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம், இன்றுடன் நிறைவடைகிறது. மக்களை இவ்வளவு நாட்களாக வாட்டி வதைத்த வெப்பச்சலனம் இன்று முதல் படிப்படியாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்கள் பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை நாளை முதல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் இன்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, “மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. எனவே மே 31ம் தேதி வரை குமரி, கேரளா, கர்நாடகம் மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
மேலும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கேரளா, கர்நாடக கடற்கரைப் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு தொடர்ந்து நிலவி வருகிறது. எனவே தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளிலும் லட்சத்தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது.”
என்று அறிவித்தார்.
அக்னி வெயிலில் வாடி வதைந்துள்ள மக்களுக்கு வானிலை மையத்தின் மழை குறித்த தகவல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.