கோவை தடாகம் அருகே பிறந்து 1 மாதமே ஆன குட்டி யானை ஒன்று தனியாக சுற்றி கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் விரைந்து சென்று குட்டி யானையை மீட்டு யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர், தடாகம் மற்றும் மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யானைகளின் வலசை காலம் என்பதால் கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் வரும் காட்டு யானைகள்,
உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியை ஓட்டியுள்ள விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகிறது.
இந்த நிலையில் தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் 14க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் திங்கட்கிழமை இரவு புகுந்தது. தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கூட்டத்தில் இருந்து பிறந்து 1 மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று தனியாக சுற்றி கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று குட்டி யானையை மீட்டனர். மேலும், குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது பன்னிமடை காப்புக்காடு பகுதியில் பெண் யானை அமர்ந்த நிலையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவலறிந்த கோவை மண்டல வனப் பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனக் கால்நடை மருத்துவர்கள் சுகுமார், விஜயராகவன், வனச்சரகர்கள் திருமுருகன், சரவணன் ஆகியோர் யானை உயிரிழந்தது குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், உயிரிழந்த யானை அருகில் உள்ள வனப்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு புதைக்கப்பட்டது. மேலும், முக்கிய உடல் பாகங்கள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "சுமார் 30 முதல் 32 வயதுமிக்க பெண் யானையின் உள் உறுப்புகளில் பிரச்சினை ஏற்பட்டு கீழே விழுந்துள்ளது. மீண்டும் எழ முயற்சிக்கும்போது நாய் போன்று அமர்ந்துள்ளது. இதனால் யானையின் எடை முழுவதும் மார்பு பகுதிக்கு வந்து தரையில் பட்டுள்ளது. மேலும், நீண்ட நேரம் எழ முடியாத நிலையில் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. பெண் யானையின் மடியில் பால் வடிகிறது. அதனால் குட்டி யானையின் தாய் என்பது தெரியவந்துள்ளது" என்றனர்.
இதனிடையே பொன்னூத்தும்மன் கோயில் அருகில் உள்ள வனப்பகுதியில் 10 யானைகள் கொண்ட கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அந்த கூட்டத்தில் இருந்த பெண் யானைகள் இந்த குட்டியை இரவு வரை சேர்த்துக்கொள்ளாததால், அந்த குட்டி யானையை வனத்துறையினர் ஜீப்பில் ஏற்றி வனப்பகுதி ஒட்டியுள்ள தோட்டத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனை நாளை காலை அருகில் உள்ள மற்ற இரண்டு யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் நாளை மாலைக்குள் குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணைய வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.