தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 10 ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க பொருளாளராக இருந்தபோது, மவுலிவாகத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து 61 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் குன்றத்தூர் மெயின் ரோட்டில் ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரைம் ஸ்ரீஸ்டி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் மூலம் உருவாக்கப்பட்ட ‘ட்ரஸ்ட் ஹைட்ஸ்’ என்ற குடியிருப்பு திட்டத்தில் ஜூன் 28, 2014 அன்று கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளான துயர நிகழ்வு நடந்தது.
2014-ம் ஆண்டு தி.மு.க பொருளாளராக இருந்த இன்றைய மு.க. ஸ்டாலின், சென்னை மவுலிவாக்கம் கட்டடம் இடிந்து விழுந்து 61 பேர் உயிரிழந்தது மற்றும் பலர் காயம் அடைந்தது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நலமனுவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (02.01.2024) விசாரிக்கிறது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பழமையான இந்த பொதுநல மனு கடந்த மார்ச் 10, 2017-ல் விசாரிக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. கிட்டத்தட்ட, ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, 2024-ம் ஆண்டின் முதல் வேலை நாளில், தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஆகியோரின் முதல் அமர்வு முன் விசாரணைக்கு மீண்டும் பட்டியலிடப்பட்டுள்ளது.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கம் குன்றத்தூர் மெயின் ரோட்டில் பிரைம் ஸ்ரீஸ்டி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் கட்டப்பட்ட டிரஸ்ட் ஹைட்ஸ் என்ற குடியிருப்பு திட்டத்தில் ஜூன் 28, 2014 அன்று இந்த சோகம் நடந்தது. 'தி ஃபெயித்' என்ற பெயரில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் 'தி பிலிஃப்' என்று பெயரிடப்பட்ட அருகிலுள்ள கட்டடத்தின் மீது இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். பல மாடி கட்டடம் இடிந்து விழுந்ததற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அவர் நியமித்தார்.
சிறப்பு விசாரணைக் குழுவின், விசாரணையில் அதிருப்தி அடைந்த மு.க. ஸ்டாலின், சி.பி.ஐ விசாரணையை வலியுறுத்தி நீதிமன்றத்தை அணுகினார். “எஸ்.ஐ.டி மேற்கொண்ட விசாரணையின் மொத்த நடைமுறையும் ஆதாரங்களை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட மூடிமறைக்கும் செயல்” என்று அவர் வாதிட்டார்.
வழக்குப் பதிவு செய்த பிறகு, கட்டடம் கட்டுபவர்களுக்கு காப்பீட்டுத் தொகுப்பைக் கட்டாயமாக்கும் சட்டம் இயற்றுவது உள்ளிட்ட பல பரிந்துரைகளை அளித்து விசாரணைக் கமிஷன் அறிக்கை சமர்ப்பித்தது உள்ளிட்ட முன்னேற்றங்களை அப்போதைய மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த அறிக்கை ஆகஸ்ட் 2015-ல் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது குறித்தும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக, 'தி பிலீஃப்' எனப் பெயரிடப்பட்ட எஞ்சியிருந்த 11 மாடிக் கட்டடத்தை வெடிமருந்துகளைப் பயன்படுத்தி இடித்துத் தள்ளப்பட்டதாக நவம்பர் 2016-ல் மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“