பீக் ஹவர் கட்டண உயர்வு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான பிற உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செப்டம்பர் 25-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ள சுமார் 165 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் கிட்டத்தட்ட 3 கோடி தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வேலை இழப்பு ஏற்படும் மற்றும் அரசுக்கு ரூ.1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் வி.திருஞானம் கூறுகையில், "இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசுக்கு 1,200 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். மின் கட்டணம் தொடர்பாக நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் 7 அம்ச கோரிக்கைகள் முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு தொழில் மின் நுகர்வோர் சங்கத்தின் கீழ் உள்ள குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்கள் செப்டம்பர் 25-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன" என்றார்.
கொடிசியா உள்பட 21 தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்நாடு சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன என அவர் தெரிவித்தார். LT CT பிரிவில் உள்ள தொழிற்சாலைகளை தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடம் இருந்து மின்சாரம் வாங்க அனுமதித்தல் மற்றும் கூரை மேல் சூரிய நெட்வொர்க்கிங் கட்டணங்களை முழுமையாக நீக்குதல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளன.
வட மாநிலங்களில் தயாரிக்கப்படும் பம்ப்செட்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பம்ப்செட்டுகளுக்காக தயாரிக்கப்படும் உதிரிபாகங்களின் விலை கிட்டத்தட்ட 20% அதிகம். பல குறு மற்றும் குடிசைத் தொழில்களின் உரிமையாளர்கள் வேறு வணிகங்களுக்குச் சென்றுவிட்டதால், தமிழகத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ பிரிவுகள் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு வணிகத்தை இழக்கின்றன என்று தமிழ்நாடு சங்கங்களின் ஒரு பகுதியாக உள்ள தொழில் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“