முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் விவகாரத்திற்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013ம் ஆண்டு, முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரள அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நில அளவு தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமிக்கப்படும் மேற்பார்வை குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இதுகுறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணையை நவம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பார்க்கிங் விவகார வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் விவகாரத்திற்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த உத்தரவிட்டார். 3 மாதங்களில் அறிக்கை சமர்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மைய விவகாரத்துக்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த தமிழ்நாடு – கேரள மாநில அரசுகள் இசைவு அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“