/indian-express-tamil/media/media_files/2025/02/20/7hhwickA8pOScb2Omd61.jpg)
முல்லை பெரியாறு அணை விவகாரம் ஒரு வாரத்தில் தீர்வு காண உத்தரவு
தமிழகம் - கேரளா இடையேயான முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் மேற்பார்வை குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கேரள அரசு குறுக்கீடாக உள்ளதாகவும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரளா இடையூறாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள், "முல்லைப்பெரியாறு விவகாரத்தில் புதிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். இரு மாநிலங்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.
உரிய தீர்வு காண இயலாவிட்டால் உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் நீதிமன்றம் தீர்வு காணும். ஒரு வாரத்தில் மேற்பார்வை குழு ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும். அதிலிருந்து இரண்டு வாரத்திற்குள் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இன்றிலிருந்து நான்காவது வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நான்கு வாரத்திற்கு பிறகு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும். முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகமும் கேரளாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது பள்ளி குழந்தைகள் சண்டை போடுவது போல உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கேரளா மேற்கொள்ள விடுவதில்லை, மரத்தை வெட்டவிடுவதில்லை என்று தமிழகமும் கேரளாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது பள்ளிக் குழந்தைகள் சண்டை போடுவது போல உள்ளது.
இது போன்ற விவரங்களில் உண்மையில் நீதித்துறை தலையீடு தேவையா என்று நாங்கள் நினைக்கிறோம். மேற்பார்வை குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் மேற்பார்வை குழு உடனடியாக கூடி முடிவெடுக்க உத்தரவிடுவோம் அல்லது அவர்கள் அறிக்கை தாக்கல் செய்து நாங்கள் ஒரு உத்தரவை பிறப்பிப்போம்.
தமிழ்நாட்டில் ஏதாவது நடந்தால், கேரளா பேரழிவை சந்திக்க வேண்டும் என்கிற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த அணை தொடர்பான வழக்குகள் சிதறி கிடக்கின்றன. எனவே மொத்த வழக்கையும் ஒன்றிணைத்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு பட்டியலிடப்பட வேண்டும் என தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கிறோம்" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.